Idealism in Education (Tamil)

 கல்வியில் கருத்தியல்வாதக்கொள்கை 


அறிமுகம்

ஐடியலிசம் (Idealism) என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். கருத்து, மற்றும் மனம் என்பவை ஒவ்வொன்றிலும் உள்ள உண்மையை மட்டுமே சார்ந்துள்ளது. இக்கொள்கை மேலை நாட்டில் எவ்வாறு கருதப்பட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் முக்கிய தத்துவ கொள்கைகளும், அவை கல்வி நடைமுறை செயல்பாடுகளை எவ்வாறு பரிந்துரைக்கின்றன என அறிதல் வேண்டும். இக்கொள்கைகளை நம் நாட்டுக் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் சிறப்பான கல்வித் திட்டங்களை வகுத்துச் செயல்பட வழிபிறக்கும் எனக் கருதலாம்.

கருத்தியல் கொள்கை விளக்கம் 

கருத்தியல் கொள்கையின் அடிப்படைக் கருத்தானது பொருள் சார்ந்த உலகைவிட ஆன்மிக உலகமே உண்மையானது என்பதாகும். மனிதனின் சிறப்பியல்பு ஆன்மிகத்தன்மையில் உள்ளது. மனம் செயல்படுவதால் தான் அறிவு நமக்குக் கிடைக்கிறது. கருத்தியல் கொள்கையானது மனித மனத்தின் மீது அக்கறை செலுத்துகிறது. ஒருவரின் சிந்தனையும், செயற்பாடும் அவரின் மன இயல்புகளையே சார்ந்துள்ளது. அத்தோடு மனத்தூய்மையே ஒருவனை உயரிய நிலைக்கு உயர்த்துகிறது. இக்கொள்கையானது மரணத்திற்குப் பிறகும் இறைத்தன்மையை அடைய உதவுகிறது

கருத்தியல் கொள்கை - பொருள்

மனித வாழ்வில் இறுதியான உண்மைப் பொருள் எது என்று ஆராயும் போது, மனம் அல்லது ஆன்மாவே அனைத்திற்கும் அடிப்படையாக அமைகிறது என்பதை கூறுகிறது கருத்தியல் கொள்கை.

கருத்தியல் கொள்கை மிகவும் பழமையானது, வேதகாலம் முதற்கொண்டே நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களான பிளேட்டோ, சாக்ரடீஸ், டெகார்டஸ், லீப்னிட்ஸ், காண்ட், ஹெகல், பெர்க்லி, புரோபல் போன்றோரும், நம் நாட்டில் காந்திஜி, சுவாமி விவேகானந்தர், தாகூர், அரவிந்தர் போன்றோரும் கருத்தியல் கொள்கையைப் பல்வேறு விதமாக அணுகி தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

மனிதன் இயற்கையாகவே ஆன்மீகத் தன்மைமிக்கவன் என்னும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது கருத்தியல் கொள்கை.

மனம் செயற்படாவிடில், எந்தப் பொருளும் அர்த்தமற்றுப் போய்விடும்: கருத்துகளே நிலையானவை என்று கூறுகிறது.

கருத்தியல் கொள்கையின் கோட்பாடுகள்

கருத்தியல் கொள்கையின் கோட்பாடுகள் பின்வரும் நிலைகளின் அமைகிறது.

கருத்துக்களே நிலையானவை

உலகத்தில் உள்ள அனைத்தையும் பகுத்துப் பார்க்கும் போது இறுதியில் நிலைத்து நிற்பது சடப்பொருள் அல்ல, மனமே என்றும் கூறுகிறது கருத்தியற் கோட்பாடு. 

மனமே பொருளின் இருப்பை உணர்த்துகிறது அதாவது காணும் பொருட்கள் யாவும் மனம் தரும் பிம்பங்களே என்று கருத்தியல் கொள்கை எடுத்துரைக்கிறது.

புலன் மாற்றத்திற்கு உட்பட்டது: ஆனால் உண்மை கருத்து வடிவமானது: எனினும் மாறாமல் நிலைத்திருக்கும்.

மனிதன் ஆன்மிகத்தன்மையுடையவனாதலால் மற்ற உயிர்களை விட மேம்பட்டு விளங்குகிறான். மனிதனது ஆன்மிகத் தன்மை அவனது அறிவு, பண்பாடு, கலை, நீதி, மதம் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்திலும் நிறைந்திருக்கம் சக்தியே கடவுள். மனித மனம் பரம்பொருளின் சிறிய கூறு. மனித மனம் தனது உண்மைத் தன்மையையும், ஆற்றலையும் உணர்த்துகிறது.

பிரபஞ்சத்தின் நியதிகள் கடவுளால் படைக்கப்பட்டவை, மனிதன் அறிந்திருந்தாலும், அறியாவிட்டாலும் உலகில் நிலவும் கோட்பாடுகளும், நியதிகளும் முழுமை பெற்று இயங்குகின்றன. பிரபஞ்ச நியதிகளை மனிதன் அறிந்துகொள்ள முற்படுகிறான். ஆனால், அவற்றைப் படைக்க இயலாத பிரபஞ்சத்தின் உண்மைக் கருத்துகள் மனிதனின் உட்காட்சி சிந்தனை மூலமாகக்கண்ட விளைவுகளே ஆகும்.

அறிவும், உண்மையும் வேறுபட்டவை. அறிவின் துணை கொண்டு உண்மையைத் தேடுதல்.

மதிப்புகள், தனிமனிதனைச் சாராமல் பொதுவாகவும், புறவயத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். மதிப்புகள் நிலையானவை, முழுமையானவை. மதிப்புகளை கண்டுணரும் வாய்ப்பு, மனித மனப்பக்குவத்தைச் சார்ந்துள்ளது. இறுதியாக நம்மைக் கவரும் மதிப்பு நம்மிடம் உள்ள ஆன்மீகத் தன்மையை மலரச் செய்கிறது. மனிதனின் ஆளுமையை உயர்த்திட உண்மை, நன்மை, அழகு, இனிமை போன்ற மதிப்புகளை வளரச் செய்ய வேண்டும்.

கருத்தியல் கொள்கையும், கல்விக் குறிக்கோள்களும்

கருத்தியல் கொள்கை கல்வியின் குறிக்கோள்களாக கீழ்கண்டவற்றை குறிப்பிடுகிறது.

1. மனித ஆளுமையை வளர்ச்சி அடையச்செய்தல்

மாணவர்கள் தம்மை உணர்ந்து, முழுமை பெற்று, ஆன்மிக உயர் எல்லையை எட்டச் செய்தலே கல்வியின் தலையாய குறிக்கோள். மாணவர்களின் ஆளுமையைச் சிறப்படையச் செய்தல், தன்னிறைவு பெற அவர்களுக்கு உதவுதல், மாணவர்களிடம் ஒடுங்கிக் காணப்படும் ஆன்மிகப் பண்புகள் வெளிப்பட்டு முழுமை பெற உதவுதல் போன்றவை கல்வியின் முக்கிய நோக்கங்களாகும்.

2, அனைவருக்கும் கல்வி

கல்வியானது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வின்றி எல்லோருக்கும் அளிக்கப்படல் வேண்டும். அப்பொழுதுதான் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி நிறைந்த மேம்பட்ட சமூகம் உருவாகும். நவீன கருத்தியல் கொள்கையை முன் எடுத்துச்சென்ற பேராசிரியர் ஹார்ன் என்பார் கல்வியின் உடனடிக் குறக்கோள்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த உடல் ஆரோக்கியம்,

செய்திறன்களின் தேர்ச்சி,

சமூக நீதி,

நல்லொழுக்க நடத்தை

இக்குறிக்கோள்கள், ஆன்மிக மணம் கமழும் சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிடும் எனக்குறிப்பிடுகிறது.

3, படைப்பாற்றலை வளர்த்திடல்

பொருள் சார்ந்த புற உலகத்தைத் தன் நோக்கங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்திடுவவதற்குத் தேவையான படைப்பாற்றலை உருவாக்கும் திறனை மாணாக்கரிடம் வளர்க்க கல்வி உறுதுணையாக இருத்தல் வேண்டும். புறவுலகை மனிதன் தன் தேவைகளுக்கும், நோக்கங்களுக்கும் ஏற்ப மாற்றியமைக்கும் திறன் பெற்றிட கல்வி உதவ வேண்டும். அறநெறி சார்ந்த விழுமங்கள்,

செய்திறன்களைப் பெறுவதன் வாயிலாகவும், அழகியலின் மதிப்புகள் மனிதன் மேற்கொள்ளும் கைத்தொழில்கள் மூலமாகவும் வெளிப்படுத்த முடியும்.

கல்வி ஏற்பாடும், கருத்தியல் கொள்கையும் மாணவர்களுக்கு அறிவையும், ஞானத்தையும் அளிப்பதாகக் கல்வி ஏற்பாடு அமைய வேண்டும்.

மனித செயல்பாடுகளை அறிவு சார்ந்த செயல்கள், அழகுணர்வை வெளிப்படுத்தும் செயல்கள், ஒழுக்க நெறிகளைப் பேணும் செயல்கள் என வகைப்படுத்த வேண்டும். மனிதவியல் பாடங்களும், அறிவியற் பாடங்களும், பொருளியற் பாடங்களைக் காட்டிலும் பயன்மிக்கவை என்று கருத்தியல் கொள்கையினர் கருதுகின்றனர். அறிவியற் பாடங்கள் தொழிற் பாடங்களை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

கற்பித்தல் முறைகள்

விளக்குதல், விவாதித்தல், வினா-விடை முறை, விரிவுரைகள் போன்றவற்றை கருத்தியல் கொள்கை ஆதரிக்கிறது.

கல்வியின் சமூகத் தொடர்பையும் கருத்தியல் கொள்கை வலியுறுத்துகிறது.

குழந்தைகள் தாமாகவே கற்றலில் ஈடுபடுவதை இவர்கள் ஆதரிக்கின்றனர்.

மாணவர்களை ஆளுமை வளர்ச்சியில் ஈடுபடுத்த ஆசிரியர் தகுந்த கற்பித்தல் முறைகளை கையாள வேண்டும்.

மனித சமுதாயத்தில் உறுப்பினராக வாழ்ந்து பிறருடன் ஒத்துழைத்தும், அதன் பண்பாட்டினை வளர்க்க முயற்சி செய்தல்.

தனி மனிதனின் முழு ஆற்றல்களையும், திறன்களையும் உணரச்செய்தல்.

மாணவர் ஒழுக்கமும், கட்டுப்பாடும்

புறக்கட்டுப்பாடுகள் வழியே அகக்கட்டுப்பாட்டை மாணவர்கள் அடைந்திட துணைபுரிய வேண்டும்.

கட்டுப்பாட்டுடன் மாணவர்கள் செயல்பட்டு, பின்னர் பொறுப்புகளை வகிக்கும் சுதந்திரம் பெற வேண்டும்.

கட்டுப்பாடு என்பது மனித சுதந்திரத்திற்கு அடிப்படை வழி முறையாகும். குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம் சமூக மரபுகளுக்கும், நிறுவன அதிகாரங்களுக்கும் மதிப்புக் கொடுத்து உலகத்தி;ல் முக்கியமானவற்றை புதியதாகக் கண்டுபிடித்தல் வேண்டும்.

சமூக மரபுகள் என்பவை பழங்காலத்தில் புத்திசாலித்தனத்தால் வடிவமைக்கப்பட்டு, தற்சமயம் நிலவிவரும் கருத்துகளாகும். இத்தகைய கருத்துகளின் மேற்பார்வையில் ஈடுபடுவதற்கு, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளித்து வழிகாட்டுதல் வேண்டும்.

கருத்தியல் கொள்கையும், ஆசிரியரும்

ஆசிரியருக்கு மிக உயர்ந்த நிலை அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாணாக்கரின் தன்மைக் கேற்பவும், கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஆசிரியர் அமைத்துத் தர வேண்டும்.

சிறந்த கல்வியாளராகவும், பண்பாடு உடையவராகவும், ஆளுமை பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

அறநெறிகளின் இருப்பிடமாகவும் ஆசிரியர் விளங்க வேண்டும்.

உண்மைப் பொருளினை அறிய வழிகாட்டியாகவும், தூண்டுகோலாகவும் ஆசிரியர் அமைய வேண்டும்.

குழந்தைகளுக்குத் தானே ஒரு முன்மாதிரியாகவும் ஆசிரியர் திகழ வேண்டும்.

கற்பித்தல் மூலமாக மாணவர்களுக்குச் சிறந்த மதிப்புகளையும், குறிக்கோள்களையும் அடையத் தூண்ட வேண்டும்.



Comments

Popular posts from this blog

Trends of Curriculum Development (Tamil)

Student Centered Teaching (Tamil)

Sociological Bases of Curriculum (Tamil)

Subject based Curriculum and Integrated Curriculum (Tamil)

Selection of Curriculum Content (Tamil)